அண்மைய காலங்களில் தேசிய ஒற்றுமையை பாதிக்கக்கூடிய விவாதங்கள் மற்றும் சர்ச்சைகள் அதிகரித்து வருவதையடுத்து, தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணையத்தை அமைக்கும் முயற்சிகளை மீண்டும் தீவிரப்படுத்த தேசிய ஒற்றுமை துறை அமைச்சு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக, கடந்த 2015-ஆம் ஆண்டில் தேசிய ஒற்றுமை ஆலோசனை மன்றத்தில் மூன்று சட்ட மசோதாக்களை தயாரிக்கப்பட்டன.
அவை இன மற்றும் மத வெறுப்பு குற்றங்கள் தொடர்பான மசோதா, தேசிய ஒற்றுமை மற்றும் சமரச மசோதா, மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணைய மசோதா ஆகியவையாகும்.
இந்நிலையில், மற்ற இரண்டு மசோதாக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணைய மசோதா கடந்த 2019-ஆம் ஆண்டில் கோட்பாட்டு ரீதியாக ஒப்புதல் பெற்றதாக அமைச்சர் ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.
ஆனால், போலீஸ் மற்றும் மனித உரிமைகள் ஆணையமான சுஹாகம் ஆகியவற்றின் அதிகார வரம்புகளுடன் மோதல் ஏற்பட்டதால், அதன் அமலாக்கம் தாமதமடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், இந்த மசோதாவை முன்னெடுக்காமல் இருப்பதாக அரசு முடிவு செய்தது.
இருப்பினும், தற்போதைய சூழ்நிலைகள் மற்றும் தேசிய ஒற்றுமையை பாதிக்கக்கூடிய சர்ச்சைகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, தேசிய ஒற்றுமை மற்றும் சமரச ஆணைய மசோதாவை மீண்டும் உருவாக்க அமைச்சு முயற்சிகளை தீவிரப்படுத்துவதாகவும் ஆரோன் அகோதெரிவித்துள்ளார்.








