புக்கிட் காயு ஹீத்தாம், பிப்.24-
மியான்மார் நாட்டில் உள்ள வாய்ப்பு மோசடிக் கும்பலின் வலையில் சிக்கிய 15 மலேசியர்கள் இன்று நாட்டிற்கு திரும்ப அழைத்து வரப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரும் புக்கிட் காயு ஹீத்தாம் குடிநுழைவு சுங்கம், தனிமைப்படுத்தல் மற்றும் பாதுகாப்பு வளாகத்திற்குப் பாதுகாப்பாக வந்து சேர்ந்தனர்.
மேல் விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் அனைவரும் அரச மலேசிய போலீஸ் படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் திருப்பி அனுப்புவதற்கு தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வசதி செய்யப்பட்டதாக வெளியுறவு அமைச்சு இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரும் கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி மியான்மார் அதிகாரிகளால் தாய்லாந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு பேங்காக்கில் உள்ள மலேசிய தூதரகம் அவர்களுக்கு உடனடி உதவியை வழங்கியதாக அது கூறியது.







