கெடா, கூலிமில் நேற்று நடைபெற்ற கைது நடவடிக்கையின் போது, ஒரு போலீஸ்காரர் சந்தேக நபரின் தலையில் மிதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தேவையற்ற மற்றும் 'அத்துமீறிய பலவந்தம் ' என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் மலேசியா அமைப்பு தனது கவலையைத் தெரிவித்துள்ளது.
அனைத்துலக மனித உரிமை தரத்தின்படி, போலீஸ் நடவடிக்கை சட்டப்பூர்வமாகவும், அவசியமானதாகவும், முறையானதாகவும் இருக்க வேண்டும். ஒரு நபர் போலீஸ்காரரின் பிடியில் இருக்கும் போது அவர் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்று அம்னெஸ்டி வலியுறுத்தியது.
முகநூலில் வைரலாகியுள்ள 29 வினாடி வீடியோவில், மோட்டார் சைக்கிளில் இருந்து ஒருவரை கீழே தள்ளி, போலீஸ்காரர் அவர் தலையில் மிதிப்பது பதிவாகியுள்ளது.
நபர் போலீஸ் வாகனத்தை உதைத்துவிட்டு, போக்குவரத்துக்கு எதிராகத் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. அவரிடமிருந்து 'கெத்தும்' நீர் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அவருக்கு போதைப்பொருள் சோதனையில் 'பாசிட்டிவ்' என வந்துள்ளது.
இந்தச் சம்பவம் போலீஸ் துறையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அம்னெஸ்டி சுட்டிக்காட்டியுள்ளது.








