சரவாக் மாநிலத்தில், பல அரசு விடுமுறைகள் ஒரே நேரத்தில் வருவதால், அம்மாநில தொழிலாளர்களுக்கு வரும் ஜூன் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மாற்று பொதுவிடுமுறைகள் வழங்கப்பட உள்ளன.
வரும் மே 31-ஆம் தேதி விசாக தினமும், அதனைத் தொடர்ந்து ஜூன் 1-ஆம் தேதி மாட்சிமை தங்கிய மலேசிய மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் பிறந்தநாளும், கவாய் தயாக் திருவிழாவின் முதல் நாளும் ஒரே நாளில் வருவதால், இந்த மாற்று விடுமுறைகள் அறிவிக்கப்படுவதாக சரவாக் தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
அதேவேளையில், கவாய் தயாக் இரண்டாம் நாளானது, வரும் ஜூன் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், தொழிலாளர் கட்டளைச் சட்டம் (அத்தியாயம் 76), பிரிவு 104(1)ன் படி, மாமன்னரின் பிறந்தநாள் கட்டாய பொதுவிடுமுறையாக இருப்பதால், அதற்கு பதிலாக வேறு நாளை வழங்க முடியாது என்றும் தொழிலாளர் துறை விளக்கமளித்துள்ளது.








