கோலாலம்பூர், பிப்ரவரி.28-
ஊழியர் சேமநிதி வாரியமான ஈபிஎஃப், தனது சந்தாதாரர்களுக்கு 2025-ஆம் நிதி ஆண்டிற்கான லாப ஈவுத் தொகையாக வழக்கமான மற்றும் ஷரியா சேமிப்புக் கணக்குகள் இரண்டிற்கும் தலா 6.15 விழுக்காட்டு விகிதத்தை இன்று அறிவித்துள்ளது. இதன் மூலம் சந்தாதாரர்களுக்கு மொத்தம் 79.6 பில்லியன் ரிங்கிட் ஈவுத் தொகையாகப் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 2025 ஆம் ஆண்டு லாப ஈவு விகிதம் 0.15% சற்று குறைந்துள்ளது. இருப்பினும், EPF பகிர்ந்து அளிக்கும் ஒட்டு மொத்தத் தொகை இந்த ஆண்டு 79.6 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 73.24 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
இது குறித்துப் பேசிய ஈபிஎஃப் தலைமைச் செயல்முறை அதிகாரி Ahmad Zulqarnain Onn , உலகளாவிய சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், சந்தாதாரர்களின் பங்களிப்பு மற்றும் சரியான முதலீட்டு உத்திகளால் இந்த வளர்ச்சி சாத்தியமானது என்று தெரிவித்தார்.
கடந்த 2025 டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதி ஆண்டில், ஈபிஎஃப் மொத்தம் 82.7 பில்லியன் ரிங்கிட் விநியோகிக்கத்தக்க வருவாயைப் ஈட்டியுள்ளது. இது 2024-ஆம் ஆண்டின் வருவாயான 75.5 பில்லியன் ரிங்கிட்டுடன் ஒப்பிடுகையில் 9.5 சதவீதம் அதிகமாகும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
ஈபிஎஃப்பின் மொத்த முதலீட்டுச் சொத்து மதிப்பு 1.41 டிரில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12.8 சதவீதம் வளர்ச்சியாகும்.
புதிய லாப ஈவுத் தொகை சந்தாதார்களின் ஈபிஎஃப் கணக்கில் நாளை, மார்ச் 1, ஆம் தேதி வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








