ஜோகூர் மாநிலம் பொந்தியானிலுள்ள இடைநிலைப் பள்ளி ஒன்றில், நேற்று மாணவி ஒருவர் கட்டிடத்தின் உயரத்திலிருந்து கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் நடைபெற்ற உடனேயே பள்ளி நிர்வாகம், அம்மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை பெற ஏற்பாடு செய்ததுடன், போலீசிலும் புகார் அளித்துள்ளது. சம்பவத்திற்கான காரணம் மற்றும் சூழ்நிலைகள் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகின்றது.
முதற்கட்ட விசாரணையில் இச்சம்பவத்தில் பகடி வதையோ அல்லது வேறு எந்தக் குற்றச்செயலுக்குமான ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என மாவட்ட போலீஸ் தலைவர் ஹட்ஸ்ரட் ஹுசைன் மியோன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாணவர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை முதன்மையாகக் கருதி, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பள்ளி நிர்வாகம் அறிக்கை விடுத்துள்ளது.








