துன் மகாதீர் முகமது பிரதமராக பொறுப்பேற்று இருந்த காலகட்டத்தில் அவரின் அமைச்சரவையில் நீண்ட காலம் நிதி அமைச்சராக இருந்தவரும், துன் மகாதீரின் மிக நெருக்கமான நண்பருமான மூத்த அரசியல்வாதி துன் டாயிம் சைனுடின் - னின் குடும்பத்திற்கு சொந்தமான 60 மாடிகளைக் கொண்ட இல்ஹாம் கட்டட கோபுரத்தை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் பறிமுதல் செய்துள்ளது.
கோலாலம்பூர் மாநகரில் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்திற்கு அருகில் வீற்றிருக்கும் 270 கோடி வெள்ளி மதிப்புள்ள துன் டாயிம் குடும்பத்திற்கு சொந்தமான அக்கட்டடம், துன் டாயிம் மற்றும் அவரின் வர்த்தக சகா ஒருவருக்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் புலன் விசாரணையின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் நில அடையாளத்தை தாங்கிய ஆடம்பர கட்டட கோபுரத்தை அந்த ஆணையம் பிறமுதல் செய்துள்ளது.
மலேசியாவின் மூத்த அரசியல்வாதியும், மூத்த முன்னாள் நிதி அமைச்சருமான ஒருவர், வெளிநாட்டில் அளவுக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளார் என்று உலக பெரும்புள்ளிகளின் சட்டவிரோத சொத்து குவிப்புகளை அம்பலப்படுத்தி வரும் பண்டோரா பேப்பர்ஸ் ( Pandora Papers ) கடந்த 2021 ஆம் ஆண்டில் திடுக்கிடும் தகவலை வெளியிட்டது.
அப்போதைய பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் அதனை பெரிதுப்படுத்தவில்லை என்ற போதிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் பிரதமராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பொறுப்பேற்றப் பின்னர் சட்டவிரோதமாக பணத்தை வெளிநாட்டில் குவித்து வைத்திருக்கும் முக்கிய தலைவர்களின் சொத்துக்கள் குறித்து ஆராயப்படும் என்று உறுதி அளித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் துன் டாயிமிற்கு எதிராக எஸ்பிஆர்எம் மேற்கொண்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக கோலாலம்பூரில் மையப்பகுதியில் உள்ள அவரின் முக்கிய சொத்துக்களின் ஒன்று, எஸ்பிஆர்எம்மினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நிதி முறைகேடு தொடர்பில் 2009 ஆம் ஆண்டு எஸ்பிஆர்எம் சட்டத்தின் கீழ் அந்த 60 மாடி கட்டடம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பது அந்த ஆணையம் உறுதி செய்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு நாட்டின் துணைப்பிரதமர், அம்னோவின் துணைத் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வீழ்த்தப்படுவதற்கும்,/ அன்வார் ஏன் பிரதமராக வர முடியாது என்பதற்கு 100 காரணங்கள் என்ற சர்ச்சைக்குரிய நூல் வெளியிடப்படுவதற்கும் துன் முகாதீரின் பின்னணியில் அரசியல் சூத்திரதாரியாக செயல்பட்டவர் அம்னோவின் முன்னாள் பொருளாருமான துன் டாயிம் ஜைனுதீன் என்று அக்காலக்கட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.








