மலாக்கா, தாமான் தேசா துயோங் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில், 8 முதல் 13 வயதுடைய சிறுவர்களைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக நம்பப்படும் 36 வயது தொழிலதிபர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுவர்கள் தங்களுக்கு நேர்ந்த கொடூரத்தைப் பெற்றோரிடம் கூறியதை அடுத்து, பொதுமக்கள் அந்த நபரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
இது குறித்துப் பேசிய மலாக்கா மாநில போலீஸ் தலைவர் டத்தோ சுல்கைரி முக்தார், இந்தச் சந்தேக நபர் இதுவரை 10 சிறுவர்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய வழக்குகளுடன் தொடர்புடையவர் என்று தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானம் மற்றும் சுராவுக்கு வரும் சிறுவர்களிடம் நயமாகப் பேசி பழகி, இந்த அத்துமீறல்களை அவர் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களில் ஒருவரைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஓரினச்சேர்க்கை வன்கொடுமை செய்துள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த நபர் மீது 2017-ஆம் ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று டத்தோ சுல்கைரி முக்தார் தெரிவித்தார்.








