சிபி ஜெயா, பிப்ரவரி.04-
சரவாக், சிபு ஜெயா மக்கள் குடியிருப்புப் பகுதிக்கு அருகிலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு குளத்தில் விழுந்து மூன்று சிறார்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இன்று மாலை 4.03 மணியளவில் இது குறித்து அவசர அழைப்பைத் தாங்கள் பெற்றதாகத் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் இருவர் சிறுமிகள் மற்றும் ஒருவர் சிறுவன் என்று அடையாளம் கூறப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் செல்வதற்கு முன்னரே, அங்கிருந்த பொதுமக்கள் அந்த மூன்று சிறார்களையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் சுயநினைவற்ற நிலையில் கிடந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த மருத்துவக் குழுவினர் அந்த மூன்று சிறார்களும் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.








