கோலாலம்பூர், மார்ச்.01-
மேற்காசியாவில் நிலவி வரும் போர்ச் சூழல் உலக வர்த்தகத்தில் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், இது மலேசியாவின் பொருளாதாரத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஜோஹான் அப்துல் கானி தெரிவித்துள்ளார். போர் காரணமாகக் கப்பல் போக்குவரத்தும் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளதால், சரக்கு விநியோகச் சங்கிலி சீர்குலைந்து வர்த்தக ஓட்டம் தடைபடும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
குறிப்பாக, வான்வெளி மூடப்படுவதால் விமானங்கள் திருப்பி விடப்படுவதும், கப்பல்கள் நீண்ட தூர மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்த வேண்டியிருப்பதும் பொருளாதாரச் செலவுகளை அதிகரிக்கும் என அவர் கவலை தெரிவித்தார். இந்த மோதல்கள் நீடித்தால் உலகளாவிய வர்த்தக அபாயங்கள் மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்ட அவர், கோலாலம்பூரில் நடைபெற்ற நோன்பு கால நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்தார்.








