கோலாலம்பூர், பிப்ரவரி.03-
கூட்டரசு அரசியலமைப்பின் 12(4) பிரிவின்படி, 18 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தையின் மதத்தை அவரது 'பெற்றோர் அல்லது பாதுகாவலர்' தீர்மானிக்கலாம் என உள்ளது. 2018-ல் இந்திராகாந்தி வழக்கில் வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், 'பெற்றோர்' என்ற சொல் பன்மையாக Parents கருதப்பட வேண்டும் என்றும், தந்தை மற்றும் தாய் ஆகிய இருவரின் சம்மதமும் மதமாற்றத்திற்கு அவசியம் என்றும் கூட்டரசு நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இதன் அடிப்படையில், ஜோகூர், பெர்லிஸ், மலாக்கா, கெடா, நெகிரி செம்பிலான், பேராக் மற்றும் கூட்டரசு பிரதேசங்களில் நடைமுறையில் உள்ள ஒருதலைப்பட்ச மதமாற்றச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திராகாந்தி வழக்கில் அவரின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன் வாதிட்டார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த கூட்டரசு பிரதேச இஸ்லாமிய சமய மன்றத்தின் வழக்கறிஞர்கள், மனுதாரர்களுக்கு இந்த வழக்கைத் தொடர எவ்வித அடிப்படை உரிமையும் இல்லை என்றும், அவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாத நிலையில் இந்தச் சவாலை முன்வைப்பது சட்டப்படி செல்லாது என்றும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் இன்று வாதிட்டனர்.
மேலும், மாநிலச் சட்டங்கள் மக்களின் தேவைகளைப் புரிந்து இயற்றப்பட்டவை என்பதால், அவை அரசியலமைப்பிற்கு உட்பட்டவை என்றே கருதப்பட வேண்டும் என்றும் பிரதிவாதிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டத்தோ அலிசா சுலைமான், இறுதித் தீர்ப்பிற்கான தேதியை உறுதிப்படுத்தினார்.








