தாவாவ், ஏப்ரல்.26-
தாவாவ், கலாபாக்கான் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில், போதைப்பொருள் போதையில் தனது மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் ஏழு மணி நேரம் சிறை வைத்து கொலை மிரட்டல் விடுத்த 39 வயது நபர் ஒருவரைப் காவற்படையினர் கைது செய்தனர். சினத்துடன் நடந்து கொண்ட அந்த நபர், தன்னைக் கட்டுப்படுத்த முயன்றவர்கள் மீது அரிவாளை வீசியதோடு, வீட்டிற்குள் நுழைபவர்களைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியதால், காவற்படையினர் சுமார் ஏழு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்தனர் என தாவாவ் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்த முயன்ற அந்த நபரை முடக்க காவற்படை 'டேஸர்' (taser) துப்பாக்கியைப் பயன்படுத்த வேண்டியிருந்தது; அவரிடமிருந்து கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், தற்போது அவர் மீது பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.








