17 வயது மாணவர் ஒருவரின் உயிரை பறித்தராபிட் பினாங்கு பேருந்து விபத்து தொடர்பான விவகாரம் அடுத்த மாதம் நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எழுப்பப்படும் என ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் தெரிவித்துள்ளார்.
இவ்வழக்கு குறித்து போலீசாரும், சட்டத்துறை தலைமை அலுவலகமும், இதுவரை எந்த ஒரு தகவலும் வழங்காததால், இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ராயர் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 24 முதல் இவ்வாண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி வரை, இது தொடர்பாக, போலீசாருக்கு மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டதுடன், உயிரிழந்த மாணவரின் தாயாரும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.
என்றாலும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும் ராயர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு, நவம்பர் 13-ஆம் தேதி, காட் லெபு மக்கல்லம் பகுதியில் இருந்து பெர்சியாரான் கர்பால் சிங் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த அம்மாணவர், ராபிட் பினாங்கு பேருந்து மோதி விபத்துக்குள்ளானார்.
இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








