ஆன்லைன் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 16 வயதிற்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகக் கணக்குகளைப் பயன்படுத்துவதற்கான தடை வரும் ஜுன் மாதம் அமலுக்கு வருகிறது.
இது குறித்துத் தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் கூறுகையில், "இந்த புதிய நடைமுறை ஜூன் மாத இறுதிக்குள் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான MCMC, சமூக ஊடக நிறுவனங்களுடன் இணைந்து இறுதிக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது" என்றார்.
சிறார்களின் வயதை உறுதிப்படுத்த வெறும் 'வயது உறுதிமொழி' மட்டும் போதாது என்றும், மைகார்ட் போன்ற அதிகாரப்பூர்வ ஆவணங்கள் மூலம் 'வயது சரிபார்ப்பு' முறையைத் தரப்படுத்த அரசு விரும்புவதாகவும் டத்தோ பாஹ்மி தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இத்தகைய தடைகளை அமல்படுத்தியுள்ள நிலையில், மலேசியாவிலும் சிறுவர்களின் மனநலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.
இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்த பிறகு, 16 வயதிற்குட்பட்டவர்கள் புதிய சமூக ஊடகக் கணக்குகளைத் தொடங்குவது முற்றிலும் கட்டுப்படுத்தப்படும் என்பதையும் அவர் விளக்கினார்.








