பேராக், கம்பாரில் 14 வயது பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆபாசமாகப் பேசியது தொடர்பில் 33 வயது மாற்றுத்திறனாளி ஆடவர் ஒருவர், கம்பார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
கோபிநாத் குலாம் முகமட் என்ற அந்த மாற்றுத் திறனாளி, கடந்த ஜூன் 18-ஆம் தேதி ஜாலான் ஈப்போ-கம்பார் பேருந்து நிறுத்தத்தில் இத்தகைய ஆபாச சேட்டையைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளையும் கோபிநாத், மறுத்து விசாரணை கோரியுள்ளார். குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத் தண்டனையும், பிரம்படித்தண்டனையும் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த மாற்றுத் திறனாளி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
குற்றஞ்சாட்டப்பட்டவர், கையில் குறைபாடு கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் அவரின் வருமானத்தை கருத்தில் கொண்டு 8 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி ஜீன் ஷர்மிலா ஜேசுதாசன் அனுமதி அளித்தார்.









