பாலிங், டிசம்பர்17-
நேற்று கம்போங் பாரு பாக்காயிலுள்ள ஒரு வீட்டில், கூரான ஆயுதத்தால் ஆடவர் நடத்திய தாக்குதலில், பெண் ஒருவர் உயிரிழந்ததோடு, அவரது தாயார் படுகாயமடைந்தார்.
நேற்று மாலை 6.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தின் போது, 60 வயது மதிக்கத்தக்க பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், அவரது 80 வயது தாயார் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் பாலிங் போலீஸ் தலைவர் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ தெரிவித்துள்ளார்.
அறிவுசார் குறைபாடு கொண்ட அந்த 21 வயது ஆடவர், இரு பெண்களையும் கூரான ஆயுதத்தால் தாக்குவதற்கு முன்பு, கோபத்தில் அங்கும் இங்கும் ஓடியதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அந்த ஆடவரை மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தாகவும் பிராண்டன் ரிச்சர்ட் ஜோ குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கானது குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்காகவும், பிரிவு 307-இன் கீழ் கொலை முயற்சியாகவும் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.








