ரவாங், சுங்ஙை சோ - வில் உள்ள ஒரு வீட்டில் ஆடவர் ஒருவர் கொலை செய்யப்பட்டு,சடலத்தை வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 19 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகளை விசாரணைக்கு ஏதுவாக 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளனர் என்று கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் நோர் அரிஃபின் நாசிர் அரிஃபின் நாசிர் தெரிவித்தார்.
ஐந்து சேந்தேகப் பேர்வழிகளும் 24 மணி நேரத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர். முதலாவது கைது நடவடிக்கை டேசா ஆமான் பூரி ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் நிகழ்ந்தது. இதில் ஓர் ஆணும், இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டனர்.
இரண்டாவது, மூன்றாவது கைது நடவடிக்கை புன்சாக் ஆலாம் - மிலும், சுங்ஙை சோ - விலும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டதாக நோர் அரிஃபின் குறிப்பிட்டார்.
இச்சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் காதலியும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவர் இந்த கொலையில் சம்பந்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட பெண்ணின் ஆபாச வீடியோ படம் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அந்தப் பெண்ணின் காதலனை சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் வெட்டி கொலை செய்து இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
எனினும் இந்த குற்றச்சாட்டை நோர் அரிஃபின் மறுத்துள்ளார்.
பக்கத்து வீட்டில் தகராறு நிகழ்ந்ததாக அண்டை வீட்டுக்காரர்கள் அளித்த போலீஸ் புகாரைத் தொடர்ந்து இந்த கொலை அம்பலமானது.








