அரசியல் கட்சி கொடிகளைக் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞர் மீது அடையாளம் தெரியாத லாரி மோதிவிட்டு நிற்காமல் சென்ற விபத்தில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
செரம்பான், ஜாலான் கோலா சாவாக் - ரெண்டாவ் பகுதியில், கம்புங் பெலாங்கான் அருகே நேற்று மாலை 6.40 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. சாலையில் கொடி கட்டிக் கொண்டிருந்த இளைஞர் மீது லாரி மோதியதில், அவரது தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்ததாக செரம்பான் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் மொமட் யத்திம் ஒஸ்மான் தெரிவித்தார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியையும், அதன் ஓட்டுநரையும் தேடும் பணியில் போலீஸ் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும், இதுகுறித்துத் தகவல் அறிந்தவர்கள் விசாரணைக்கு உதவ முன்வருமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.








