கோலாலம்பூர், டிசம்பர்.07-
மலேசியா, தீவிர வறுமை ஒழிப்பு இலக்கை அடைவதில் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் 0.09 விழுக்காடு என்ற மிகக் குறைந்த வறுமை விகிதத்தையும் சுழியத்திற்குக் கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தச் சாதனையை அறிவித்தார். இது மலேசியாவைத் தீவிர வறுமையை இல்லாது ஒழித்த உலகின் ஒரே நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது என்று பெருமிதம் கொண்டார். பெரிய எண்ணிக்கையிலான வீடற்ற மக்களையும், தெருக்களில் வாழும் மக்களையும் கொண்டுள்ள அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மலேசியாவின் குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.
கடந்த செப்டம்பர் மாதம் வரையில், மலேசியாவின் வேலையின்மை விகிதம் வெறும் 3 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது மாடானி அரசாங்கத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளின் நேரடிப் பலனாகும். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது. மூன்றாவது காலாண்டில் 5.2 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது. மேலும் ஒட்டுமொத்த வர்த்தக மதிப்பு 2.335 trilion ரிங்கிட்டைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது. அத்துடன், மலேசிய ரிங்கிட்டின் செயல்திறன் தற்போது ஆசியாவிலேயே மிக உயர்ந்த நிலையில் உள்ளது. இஃது ஒரு போட்டித்தன்மை வாய்ந்த வர்த்தக நாடாக மலேசியா தொடர்ந்து வலுவாக இருப்பதைக் காட்டுகிறது.








