மலாக்கா,செப்டம்பர் 06-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, மதுபோதையில் வாகனத்தை செலுத்தி, மரணம் விளைவித்த குற்றத்திற்காக ஒப்பனை நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையாளருக்கு மலாக்கா, அயர் கெரோஹ் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 10 ஆண்டு சிறைத் தண்டனையும் 70 ஆயிரம் வெள்ளி அபராதமும் விதித்தது.
லீ ஹான் வீ என்ற 45 வயதுடைய அந்த மேற்பார்வையாளர், தனக்கு எதிரான குற்றச்சாட்டில் முன்வைத்த தற்காப்பு வாதத்தில் நியாயமான சந்தேகத்தை ஏற்படுத்த தவறிவிட்டார் என்று மாஜிஸ்திரேட் அஸுக்ரீன் சாஹிரா ஸுப அபாண்டி தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட நபர், தனது சிறைத் தண்டனையை நிறைவு செய்து விட்டு வெளியேறும் தேதியிலிருந்து 10 ஆண்டுகளுக்கு அவரின் வாகனமோட்டும் லைசென்ஸ் முடக்கப்படுவதாக மாஜிஸ்திரேட் அஸுக்ரீன் குறிப்பிட்டார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அதிகாலை 12.45 மணியளவில் மலாக்கா, கிளேபாங் ஜாலான் லிம்போங் கன்சாலையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி, 53 வயது அப்துல் ரஹீம் முகமது என்பவருக்கு மரணம் விளைவித்ததாக அந்த மேற்பார்வையாளர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.








