பெட்டாலிங் ஜெயா, ஜூன் 21-
அண்டை வீட்டில் வசித்து வந்த தனது காதலன் மற்றும் வயது குறைந்த மாணவன் ஒருவனுடன் கூட்டாக சேர்ந்து, ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த தனது கணவனை கத்தியால் சரமாரியாக குத்தி கொன்ற ஓர் இந்திய மாது சம்பந்தப்பட்ட வழக்கில் இருவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
மரணத் தண்டனைக்கு பதிலாக அவ்விருவருக்கும் 36 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பதாக கூட்டரசு நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பில் தெரிவித்தது.
திருமணமானவரான 47 வயது K. அன்னம்மா மற்றும் அவரின் காதலனான 34 வயது G. புகனேஸ்வரன் ஆகியோருக்கு தலா 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதுடன் புகனேஸ்வரனுக்கு 12 பிரம்படித்தண்டனை விதிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்கு தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தேங்கு மைமுன் துவான் மாட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்றாவது நபரான மாணவன் N. ஹரிச்சந்திரன், மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தானின் மன்னிப்பு கிடைக்கும் வரை சிறையில் தடுத்து வைப்பதற்கு ஏற்கனவே கூட்டரசு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது.
இந்த மூவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி அதிகாலை 2.45 மணியளவில் Blok A, பிளாட் பெட்டாலிங் உத்தாமா, பெட்டாலிங் ஜெயா என்ற முகவரியில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் ஒரு லோரி ஓட்டுநரான M. கணேசனை கத்தியால் குத்தி மிக கொடூரமாக கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தனர்.
புகனேஸ்வரன் மற்றும் அன்னமாவின் மரணத் தண்டனையை ஷா ஆலாம் உயர் நீதிமன்றம், புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் மற்றும் கூட்டரசு நீதிமன்றம் ஏற்கனவே உறுதி செய்து இருந்தது.
எனினும் நாட்டில் மரணத் தண்டனை நடைமுறை அகற்றப்பட்டுள்ளதால், அந்த இருவருக்கும் விதிக்கப்பட்ட மரணத் தண்டனையை சிறைத் தண்டனையாக மாற்றுவதற்கு அவர்களின் வழக்கறிஞர்கள் விண்ணப்பம் செய்து இருந்தனர்.
எனினும் அவர்களின் இந்த விண்ணப்பத்திற்கு அரசு தரப்புக்கு தலைமையேற்ற துணை பப்ளிக் பிராசிகியூட்டர் ங் சியூ வீ பலத்த எதிர்ப்பு தெரிவித்தார்.
காரணம், தனது அண்டை வீட்டுக்கார இளைஞன் மீது கொண்டிருந்த ரகசிய தொடர்பினால் தனது கணவனை கொலை செய்வதற்கு அன்னம்மா தூண்டினார் என்பதற்கு போதுமான சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக ங் சியூ வீ தமது வாதத்தில் தெரிவித்தார்.
தனது கணவர் கணேசன், மதுபோதையில் தன்னை அடித்து துன்புறுத்துவதாக குடும்பக்கதையை தனது காதலன் புகனேஸ்வரனிடம் அன்னம்மா கூறியுள்ளார்.
தனது கணவனை கொலை செய்யும் நோக்கில் தனது காதலன் புகனேஸ்வரன், மற்றும் பணத்திற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட மாணவன் ஹரிச்சந்திரன் ஆகியோர் தனது வீட்டிற்கு நுழைவதற்கு ஏதுவாக அன்னம்மா தனது அடுக்கு மாடி வீட்டின் கதவை திறந்து வைத்துள்ளார்.
ஆழ்ந்த உறக்கத்தல் இருந்த அன்னம்மாவின் கணவர் கணேசனின் கால்களை ஹரிச்சந்திரன் பற்றிக்கொள்ள, அவரை முதலில் தலையணையால் மூச்சடைக்க வைத்து, அதன் பின்னர் அவரின் நெஞ்சுப்பகுதியில் பல முறை கத்தியால் குத்தியுள்ளனர்.
சவப்பரிசோதனை நிபுணரே அதிர்ச்சி அடையும் அளவிற்கு கணேசனின் நெஞ்சுப்பகுதியில் ஆழமான கத்திக்குத்துக்கள் காணப்பட்ட இந்த கோர கொலை வழக்கில் அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தப்படுவதே மற்றவர்களுக்கு உணர்த்தும் பாடமாகும் என்று நீதிமன்றத்தை ங் சியூ வீ கேட்டுக்கொண்டார்.








