கோலாலம்பூர், டிசம்பர்.06-
பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அடுத்த வாரத்தில் அமைச்சரவை மாற்றத்தை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த அமைச்சரவை மாற்றத்தில் கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சீடேக் அதிகமா பாதிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பினாங்கு நிபோங் திபால் எம்.பி.யான 48 வயது ஃபாட்லீனா சீடேக் கல்வி அமைச்சிலிருந்து மாற்றப்படுவதற்கான சாத்தியம் அதிகமாக உள்ளதாக அகாடமி நுசாந்தாரா ஆய்வு மையத்தை சேர்ந்த அஸ்மி ஹசான் கூறுகிறார்.
இந்த அதிரடி மாற்றத்தில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சிகளின் சார்பாக இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் ஆகியோரை பிரதமர் இலக்காக கொண்டு இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் தனது கூட்டணியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் இலாகாக்களை மாற்றுவது டத்தோ ஶ்ரீ அன்வாருக்கு சுலபம். ஆனால், அம்னோ மற்றும் இதர கட்சிகளின் அரசாங்கப் பொறுப்புகளைப் பிரதமர் மாற்ற மாட்டார். அந்தப் பொறுப்புகளில் கை வைக்க மாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுவதாக அஸ்மி ஹசான் கூறுகிறார்.
தாம் மேற்கொள்ளக்கூடிய அமைச்சரவை மாற்றமானது சிறியது என்றாலும் நடப்பு அமைச்சர்களில் அதிக இடர்மிக்க அமைச்சராக ஃபாட்லீனா சீடேக் கருதப்படுகிறார்.
அண்மையில் பள்ளிகளில் குறிப்பாக வகுப்பறையில் மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்த பாலியல் பலாத்காரம், கொலை, பகடி வதை, மரண சம்பவங்கள், ஆசிரியர்களிடையே தகாத பாலியல் தொடர்பு போன்ற பிரச்னைகள் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
கல்வி அமைச்சர் என்ற முறையில் ஃபாட்லீனா சீடேக் இப்பிரச்னைகளை சரியான முறையில் கையாளவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டு, பிகேஆர் கட்சியைச் சேர்ந்த கல்வி அமைச்சருக்கு எதிராக இன்னமும் உண்டு.
இத்தகைய பிரச்னைகளைக் கையாளுவதில் தனது பலவீனங்களை ஃபாட்லீனா சீடேக் அண்மையில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் ஃபாட்லீனா சீடேக் இலாகா மாற்றப்படலாம், அல்லது களை எடுக்கப்படலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.








