ஏழு தெரு நாய்கள் விஷம் வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பிராணிகள் நல ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பகாங், பெக்கான் பகுதியில் நடந்த இச்செயல் மனிதாபிமானமற்றது எனக் கண்டித்துள்ள பகாங் பிராணிகள் சங்கத் தலைவர் ஜூரினா அப்துல் ராணி, வாயில்லா ஜீவன்களை இவ்வளவு கொடூரமாகக் கையாண்டது வேதனைக்குரியது எனத் தெரிவித்தார்.
தெரு நாய்களின் பெருக்கத்திற்கு மனிதர்களின் பொறுப்பற்றத்தனமே காரணம் என்றும், குறிப்பாகக் கட்டுமானப் பணிகளுக்குப் பின் நாய்களைக் கைவிட்டுச் செல்லும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
"விலங்குகளை நேசிக்காவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் அவற்றைச் சித்திரவதை செய்யாதீர்கள்" என்று அவர் மிக உருக்கமாகக் கேட்டுக்கொண்டார்.








