கோலாலம்பூர், மார்ச்.12-
தைப்பூசக் காவடியாட்டதை கொச்சைப்படுத்தி, இந்துக்களை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்துவிற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.
இன்று பிற்பகல் வரையில் ஜம்ரி வினோத்துக்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இதன் தொடர்பில் ஜம்ரி வினோத், விசாரணை செய்யப்பட்டு, வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து விட்டனர்.
மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை, சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.
போலீசார் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை இன்னமும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்து வருவதாக ஐஜிபி மேலும் கூறினார்.








