புதுடில்லி, ஆகஸ்ட் 20-
மலேசியா-இந்தியா இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இம்மாதம் 19-ஆம் தேதியில் இருந்து 21-ஆம் தேதி வரை இந்தியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவருடன் இணைந்து இந்தியாவிற்கு வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ உதாமா ஹாஜி முகமது பின் ஹாஜி ஹசன், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ உத்தம சப்பீராள் பின் டெங்கு அஜீஸ்,சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ ஸ்ரீ திங் கிங் சிங், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மற்றும் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் சீ கியோங் ஆகியோர் பயணம் மேற்கொள்கின்றனர் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்-ரின் வரவேற்பிற்காக இந்திய அரசு பல முன்னேற்பாடுகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவர் நிச்சயமாக இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் மலேசியா முன்னேற்ரத்திற்காக பல திட்டங்களை கலந்தாலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், பிரதமர் இந்தியாவின் அதிபர் திரௌபதி முர்மு- வையும் சந்தித்து பேச்சுகள் நடத்துவார் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உலக விவகாரங்களுக்கான இந்திய மன்றத்தில் DATO SERI ANWAR “TOWARDS A RISING GLOBAL SOUTH: LEVERAGING MALAYSIA-INDIA TIES” என்ற தலைப்பில் உரையாற்றவுள்ளார்.
2023- இல், மலேசியா மற்றும் இந்தியாவின் மொத்த வர்த்தகம் RM76.62 பில்லியனை எட்டியுள்ள நிலையில், பிரதமரின் இந்த இந்தியா பயணம் மேலும் மலேசியாவின் பெருளாதாரத்தை உயர்த்த வழிவகுக்கும்.
2023-ஆம் ஆண்டில், ஆசியான் உறுப்பு நாடுகளில் இந்தியாவின் மூன்றாவது பெரிய வர்த்தக நட்பு நாடாக மலேசியா இருந்தது குறிப்பிடத்தக்கது.








