தங்காக், ஏப்ரல்.29-
ஜோகூர், புக்கிட் கங்கார் உணவகம் ஒன்றில் கடந்த மார்ச் 13-ஆம் தேதி நிகழ்ந்த கொடூரக் கொலைச் சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த மூன்று முக்கியச் சந்தேக நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
மலாக்கா, ஜாசின் சுற்றியுள்ள மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்றிரவு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில், 24 முதல் 32 வயதுடைய இந்த மூவரும் பிடிபட்டதாகத் தங்காக் மாவட்டப் போலீஸ் தலைவர் ரோஸ்லான் முகமது தாலிப் உறுதிப்படுத்தியுள்ளார்.
முகமூடி அணிந்த மர்ம நபர்களால் 38 வயதுடைய தொங் வேய் ஷெங் என்பவர் வெட்டிக் கொல்லப்பட்ட இந்த வழக்கில், ஏற்கனவே 10 பேர் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது பிடிபட்டுள்ள இந்த முக்கிய சந்தேகப் பேர்வழிகள் மூலம் விசாரணை முழுமை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் மீது கொலைக் குற்றத்திற்கான குற்றவியல் சட்டம் பிரிவு 302-இன் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று ரோஸ்லான் தெரிவித்தார்.








