கோலாலம்பூர், நவம்பர்.12-
தத்தெடுக்கும் முறையைத் தவறாகப் பயன்படுத்தி குழந்தைகளைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கும் கும்பல் தொடர்பாக, தேசியப் பதிவிலாகாவிற்கு இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ புகாரும் வரவில்லை என்று உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அது போன்ற குற்றச்சாட்டுகளைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் அமைச்சு, இந்த விவகாரத்தில் எந்தவித சமரசமும் காட்டாது என்றும் குறிப்பிட்டுள்ளது.
தத்தெடுப்பு பதிவுச் சட்டம் 1952-ன் படி, தற்போது நடைமுறையில் உள்ள தத்தெடுக்கும் முறையானது, குறைந்தபட்ச பராமரிப்புக் காலம், மரபு வழிப் பெற்றோரின் ஒப்புதல், அதிகாரப்பூர்வ ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட நிபந்தனைகளுக்கும், கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டது என்றும் உள்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
தற்போதைய நடைமுறைகள் போதுமானதாகக் கருதினாலும் கூட, தத்தெடுப்புப் பதிவுச் சட்டம் 1952 மற்றும் தத்தெடுப்புச் சட்டம் 1952 இரண்டையும் திருத்தும் நோக்கத்துடன், மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.








