பள்ளி வளாகத்தில் 8 வயது மாணவியின் உயிரிழப்பிற்குக் காரணமான வேன் ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று மதியம் 12.30 மணியளவில் நடந்த இச்சம்பவத்தையடுத்து, 60 வயதான வேன் ஓட்டுநர் உடனடியாக கைது செய்யப்பட்டதாக, பத்து பகாட் போலீஸ் தலைவர் ஷாருலானுவர் முஷாடத் அப்துல்லா சானி தெரிவித்துள்ளார்.
சம்பவத்தின் போது, பள்ளியின் பிரதான நுழைவாயிலில், அந்த வேன் வெளியேறும் போது, அதன் முன்பாக நடந்து சென்ற மாணவியை மோதியதாக ஷாருலானுவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்தில் தலையிலும், உள்ளுறுப்புகளிலும் கடுமையான காயங்களுக்கு உள்ளான அந்த மாணவியை, பரித் சுலோங் சுகாதார நிலைய மருத்துவக் குழு பரிசோதித்த போது, சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.
இந்நிலையில் இச்சம்பவமானது சாலைப் போக்குவரத்து சட்டம் பிரிவு 41(1) கீழ், கவனக்குறைவாக அல்லது ஆபத்தான வகையில் வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.








