பாசீர் கூடாங், கோத்தா மாசாய் பகுதியில் போலீஸ் அதிகாரி ஒருவர் மோட்டார் சைக்கிள் ஓட்டியை எட்டி உதைத்ததால் அவர் கீழே விழுந்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் குற்றச்சாட்டை ஜோகூர் போலீசார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.
நேற்று அதிகாலை 1.30 மணியளவில் 'ஓப் செலாமாட் 26' நடவடிக்கையின் போது, ஜாலான் புலாசான் பகுதியில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயம் குறித்து போலீசாருக்கு புகார் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் சென்றபோது, அங்கு குழுமியிருந்த இளைஞர்கள் பல திசைகளில் தப்பியோடினர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிள் போலீசாரை நோக்கி வேகமாக வந்து தப்பிக்க முயன்றது. போலீசார் அவரை நிறுத்த முயன்றபோது, சாலையோரத்திலிருந்த கல் மீது மோதி அந்த நபர் நிலைதடுமாறி விழுந்தார். இது குறித்து விளக்கமளித்த ஸ்ரீ ஆலாம் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் ஜி. விக்டர், "சம்பந்தப்பட்ட நபர் தானாகவே நிலைதடுமாறி விழுந்தார் என்றும் போலீசார் அவரை எட்டி உதைக்கவில்லை" என்றும் உறுதிப்படுத்தினார்.








