கோலாலம்பூர், பிப்ரவரி.04-
புக்கிட் பிந்தாங்கில் முறையான உரிமம் இன்றி செயல்பட்டு வந்த அழகு நிலையம் ஒன்றில், குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், 15 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், கடந்த செவ்வாய்க்கிழமை அங்கு சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 15 வெளிநாட்டவர்களில், சீனாவைச் சேர்ந்த 6 ஆடவர்களும், 7 பெண்களும், 2 மியன்மார் நாட்டுப் பெண்களும் இருந்ததாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸாகாரியா ஷாபான் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் முறையான பணி உரிமம் இன்றி, சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இச்சோதனையின் போது, அங்கு, ஊழியர்களின் சீருடைகள், கைபேசிகள், மடிக்கணினிகள், சிசிடிவி உபகரணங்கள், வணிக உரிமங்கள் மற்றும் நிறுவனத்துடன் தொடர்புடைய பிற ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.








