கோலாலம்பூர், ஏப்ரல்.01-
நிலத்தடி எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீச் சம்பவத்தினால் சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ரா ஹைட்ஸில் அருகில் சுங்கை பாருவில் உள்ள வீடுகள் பலத்த சேதத்திற்கு இலக்காகின. சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டன. இன்னும் சில வீடுகள், வெப்பத்தின் தாக்கத்தினாலும், அங்கிருந்து பறந்து வந்த சாம்பல் மற்றும் தீ கசடுகளினாலும் சேதமுற்றன.
வீட்டின் கூரைகள் மற்றும் உட்புற சிலிங்குகள் உடைந்தன. சேதமுற்ற வீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக சிலாங்கூர் விவேகச் செயலாக்க மையமான SSOC இன்று பிற்பகலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதே வேளையில் வீடுகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கியவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது டேவான் செர்பாகுனா மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் பல நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.








