கோலாலம்பூர், ஜனவரி.28-
பினாங்கு தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி ஸ்ரீ ஆயிர வைசியர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் முன்புறம் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சான குஸ்கோப் (KUSKOP) பல்வேறு சேவைகளை வழங்கவுள்ளது. TEKUN Nasional, Bank Rakyat மற்றும் SME Corp உள்ளிட்ட ஒன்பது ஏஜென்சிகள் இதில் பங்கேற்று, வணிக நிதியுதவி, தொழில்முனைவோர் பயிற்சி மற்றும் கூட்டுறவு ஆலோசனைகள் போன்ற தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளன.
பினாங்கு தைப்பூச விழாவில் குஸ்கோப் அமைச்சு வழங்கவிருக்கும் சேவைகள் குறித்து அதன் அதன் அமைச்சர் ஸ்டீவன் சிம் இன்று மதியம் நாடாளுமன்றக் கட்டத்தில் நடத்திய செய்தியாளர்கள் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார்.
பத்து எம்.பி. P. பிரபாகரன், புக்கிட் குளுகோர் எம்.பி. ராம் கர்ப்பால், புக்கிட் பெண்டேரா எம்.பி. ஷெர்லீனா அப்துல் ரஷிட் ஆகியோருடன் இணைந்து நடத்திய செய்தியளார்கள் கூட்டத்தில் ஸ்டீவன் சிம் இதனை விளக்கினார்.
பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக 'குஸ்கோப் மடானி' முக்கியக் கூடாரத்தில் இலவச ஓய்வறை வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 200 பேர் வரை அமரக்கூடிய இந்த இடத்தில், நாள் முழுவதும் சுமார் 1,500 பேர் பயனடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் ஸ்டீவன் சிம் விளக்கினார்.
மேலும், இலவச உடல்நலப் பரிசோதனை, பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறை மற்றும் இலவச உணவு, பானங்கள் ஆகியவையும் இங்கு வழங்கப்படும்.
இந்தச் சேவைகளை ஒருங்கிணைக்க 17 முதல் 30 வயதுக்குட்பட்ட பல்வேறு இனங்களைச் சேர்ந்த 200 Wira KUSKOP தன்னார்வலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர். இவர்கள் குறிப்பாக முதியவர்கள், சிறுவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதோடு, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும் உதவுவார்கள் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்தார்.








