மலேசியா தனது நாட்டு எண்ணெயை ஆஸ்திரேலியாவிற்கு விற்கத் திட்டமிட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ஆஸ்திரேலியப் பிரதமர் அந்தோணி அல்பானீஸுடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான அலுவல் ரீதியான தேவைகள் குறித்து மட்டுமே ஆலோசிக்கப்பட்டதாக அவர் விளக்கமளித்தார். குறிப்பாக, ஆஸ்திரேலியாவிடமிருந்து பாஸ்பேட் பெறுவது குறித்தும், பதிலுக்கு மலேசியாவிலிருந்து யூரியா போன்ற பொருட்களை வழங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
ஆஸ்திரேலியாவுக்கு டீசல் தேவைப்பட்ட போதிலும், தற்போதுள்ள சூழலில் மலேசிய மக்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதால், அந்த கோரிக்கையை ஏற்க இயலவில்லை என பிரதமர் தெரிவித்தார். "எண்ணெய் விற்பதாகக் கூறப்படுவது வெறும் அவதூறு, உண்மையில் நாங்கள் எண்ணெய் விற்கவில்லை," என்று அவர் தெளிவுபடுத்தினார்.
மேலும், உணவு மற்றும் எரிபொருள் பாதுகாப்பை உறுதி செய்ய இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளதோடு, இறைச்சி வணிகம் மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடு ஆகியவற்றில் ஒத்துழைக்க உடன்பட்டுள்ளன என்று பிரதமர் விளக்கினார்.








