முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கின் பொதுமன்னிப்பு மனுவை கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியம், அடுத்த கூட்டத்தில் விவாதிப்பதாக ஒத்திவைத்தது, மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமின் அதிகாரத்திற்கு உட்பட்ட முடிவு என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இந்திய பயணத்தை நிறைவு செய்த பின்னர், கேரளாவில் நேற்று மலேசிய ஊடகங்களிடம் உரையாற்றிய அன்வார், சட்டம் மற்றும் சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் தமது கருத்தைத் தெரிவித்ததாகக் கூறினார்.
அதேவேளையில், மன்னிப்பு வாரியக் கூட்டத்தில் எடுக்கப்படும் இறுதி முடிவும் மாமன்னரின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் அன்வார் விளக்கமளித்தார்.
முன்னதாக நஜிப்பின் மன்னிப்பு மனு ஒத்திவைக்கப்பட்டதற்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என பாஸ் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு பதிலளித்த அன்வார், மன்னிப்பு வாரியத்தின் விதிமுறைகளை முதலில் பாஸ் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.








