கெடா மாநிலம், கூலிம், தாமான் டேசா கயங்கான் பகுதியில் நேற்று மாலை, நீர்த்தேக்கக் குளத்தில் விழுந்த கால்பந்தை எடுக்க முயன்ற போது, அதில் தவறி விழுந்த 4 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து கூலிம் மாவட்ட போலீஸ் தலைவர் ஷம்சுல் சின்ரிங் கூறுகையில், இரு சிறுவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற இருவர் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகத் தெரிவித்தார்.
மேலும், இச்சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்ததும், சுங்கை கராங்கான் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் இந்தச் சம்பவத்திற்கு நேரடி சாட்சிகள் யாரும் இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நீர் தேக்க குளமானது சுமார் 10 அடி ஆழமும், 6 அடி அகலமும் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த சிறுவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேற்று இரவு அலோர் ஸ்டார் சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன.








