முன்னாள் பிரதமர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தொடர்பான ஜானா விபாவா ஊழல் வழக்கு விசாரணையின் போது ரகசிய ஆவணம் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாக எஸ்பிஆர்எம் அதிகாரி ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி, மாலை 6 மணியளவில் கோலாலம்பூர் உயர்நீதிமன்ற விசாரணையின் போது, முகைதீனின் வழக்கறிஞர் டத்தோ அமீர் ஹம்ஸா அர்ஷாட் அந்த ஆவணத்தை முன்வைத்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆவணம், தொழிலதிபர் அடாம் ரட்லான் அடாம் முஹமட் அளித்த வாக்குமூலம் என்றும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-ன் பிரிவு 53(3) கீழ் பதிவு செய்யப்பட்டு ரகசியமாக வகைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆவணம் முகைதீனின் வழக்குடன் தொடர்புடையது அல்ல என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புத்ராஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் அய்டி ஷாம் முஹமட் புகார் பெறப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவ்வழக்கு விசாரணை இன்று செப்டம்பர் 15-ஆம் தேதி நீதிபதி நூர் ருவேனா மாட் நுர்டின் முன்னிலையில் மீண்டும் நடைபெறுகிறது.








