எதிர்கால கால்பந்து போட்டிகள் பாதுகாப்பு விதிமுறைகளுக்கு ஏற்ப நடைபெற, மலேசியக் கால்பந்துச் சங்கம் உருவாக்கி வரும் கால்பந்து பாதுகாப்பு கட்டமைப்பை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று ஜோகூர் மாநில அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் டாக்டர் முகமது நகீப் முகமது கசாலி வெளியிட்டுள்ள தகவலில், யுகேஎம் எனப்படும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகம் இணைந்து உருவாக்கி வரும் இந்தக் கட்டமைப்பு, தனியார் போட்டிகள் உட்பட அனைத்து கால்பந்து போட்டிகளுக்கும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை வகுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
போட்டி நடைபெறும் முழு காலத்திலும் மருத்துவ அவசர உதவியாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கால்பந்து போட்டியின்போது மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் போல், மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில், இந்த பாதுகாப்பு கட்டமைப்பை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று, பாதிக்கப்பட்ட மாணவரின் குடும்பத்தினரை பாசிர் கூடாங் பகுதியில் சந்தித்த பின்னர் அவர் தெரிவித்துள்ளார்.








