கோலாலம்பூர், ஜனவரி.25-
கடந்த ஜனவரி 15-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் மட்டும், 10 நிறுவனங்கள் தங்களின் வங்கிக் கணக்குகளைப் பண மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியது தொடர்பாக 111 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகப் புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறி வரும் விளம்பரங்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும், குறிப்பாகச் சம்பந்தமில்லாத நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் கணக்குகளுக்குப் பணத்தைப் பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும் டத்தோ ருஸ்டி முஹமட் இசா எச்சரித்துள்ளார்.
முறையாகப் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களாக இருந்தாலும், அவை மோசடி கும்பல்களின் 'வாடகை வங்கிக் கணக்குகளாக' பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளதால், முதலீடு செய்வதற்கு முன் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகும். பொதுமக்கள் ஏதேனும் பணப் பரிமாற்றங்களைச் செய்வதற்கு முன்னதாக, சம்பந்தப்பட்ட தொலைபேசி எண்கள் அல்லது வங்கிக் கணக்குகளின் நம்பகத்தன்மையை 'Semakmule' அகப்பக்கம் வழியாகச் சரி பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.








