சிரம்பான், ஜூலை.19-
இந்து சமயத்தினரின் புனித சின்னங்களின் ஒன்றான திரிசூலத்தை எட்டி உதைத்து அவமதித்து, இந்துக்களின் மனதைப் புண்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த சமூக ஆர்வலர் தமீம் தஹ்ரி அப்துல் ரஸாக், நான்கு மாதங்களுக்குப் பிறகு போலீசில் சரணடைந்ததைத் தொடர்ந்து, அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இது குறித்து கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ அல்ஸஃப்னி அஹ்மாட் கூறுகையில், நீதிபதி Naeilah Nikrul Tarmizi வழங்கிய உத்தரவின் பேரில், தமீம் தஹ்ரி, நாளை ஜூலை 20-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தமீம் நேற்று மதியம் சுமார் 12.45 மணியளவில் சிரம்பான் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் விசாரணைக்காக கெடாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, இன்று காலை சுமார் 9.40 மணியளவில் போலீஸ் வாகனத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்த வழக்கில், தமீம் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 506-ன் கீழ் குற்றவியல் மிரட்டல் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233-ன் கீழ் இணைய வசதிகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், Attorney-General அலுவலகம், அவருக்கு எதிராக பொருத்தமான சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றம் சுமத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தப்பியோடிய தமீம், தாய்லாந்தில் தங்கியிருந்ததுடன், அண்மையில் கிளந்தான் எல்லை வழியாக சட்டவிரோதமாக மலேசியா திரும்பியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திரிசூலத்தை அவமதித்த இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும், அவருக்கு எதிராக மொத்தம் 192 போலீஸ் புகார்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.








