புத்ராஜெயா, ஜூலை.15-
இன்று புத்ராஜெயாவில் மலேசிய ஊடக மன்றத்தின் 12 வாரிய உறுப்பினர்களில் ஆறு பேருக்கு, தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் நியமனக் கடிதங்களை வழங்கினார்.
பத்திரிகை, ஊடகம், கல்வி மற்றும் தகவல் தொடர்புத் துறைகளில் அவர்களின் நிபுணத்துவம், அனுபவம் மற்றும் பங்களிப்புகளின் அடிப்படையில் அனைத்து வாரிய உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாண்டு ஜூன் 14 ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்த மலேசிய ஊடக மன்றத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான சட்டம் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டது.
மலேசியாவில் ஊடகத் துறைக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் ஒரு சுயேட்சை அமைப்பாக மலேசிய ஊடக மன்றம் செயல்படவிருக்கிறது.
பொதுமக்கள் மத்தியில் உண்மையான, நேர்மையான மற்றும் நியாயமான தகவல்களைப் பெறுவதை உறுதிச் செய்வதில் ஊடக சுதந்திரத்தை முன் நிறுத்த, தகவல் தொடர்பு அமைச்சின் மூலம் மடானி அரசாங்கம் உறுதி பூண்டுள்ளது என்று அமைச்சர் டத்தோ ஃபாமி தெரிவித்தார்.
மலேசிய ஊடக மன்றத்தை நிறுவுவதன் மூலம், தகவல் தொடர்பு அமைச்சின் வாயிலாக அரசாங்கம் உள்ளூர் ஊடக நிறுவனங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது அறிவுறுத்தல்களை வழங்கவோ விரும்பவில்லை. மாறாக, மலேசிய ஊடக மன்றம் நிலையானது. எதிர்காலத்தில் ஊடகத் துறையைக் கூடுதல் நெறிமுறைத் தன்மைகளுடன், கடப்பாடு நிறைந்ததாக மாற்றுவதில் சுயேட்சியாகச் செயல்படும் ஸ்தாபனங்களாக பரிணாமிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் விளக்கினார்.
இதன் வாயிலாக ஊடகத் துறையின் ஒருமைப்பாடு, நடைமுறைகள் மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் டத்தோ ஃபாமி தமது உரையில் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் தொடர்புத்துறை துணை அமைச்சர் தியோ நீ சிங்கும் அமைச்சர் டத்தோ ஃபாமியுடன் கலந்து கொண்டு, சிறப்புச் சேர்த்தார்.








