Jul 1, 2026
Thisaigal NewsYouTube
அரசுத் துறையில் வீட்டிலிருந்தே வேலை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்த பிரதமர் அன்வார் உத்தரவு
தற்போதைய செய்திகள்

அரசுத் துறையில் வீட்டிலிருந்தே வேலை: கண்காணிப்பைத் தீவிரப்படுத்த பிரதமர் அன்வார் உத்தரவு

Share:

அரசாங்கத் துறையில் இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ள 'வீட்டிலிருந்தே வேலை' முறையைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கருக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார். குறிப்பாக, வீட்டிலிருந்து பணியாற்றும் அரசு ஊழியர்களின் வருகையை உறுதி செய்வது அவசியம் என அவர் குறிப்பிட்டார். எனினும், பொதுமக்களுக்கான நேரடி முகப்பிட சேவைகள் எவ்வித பாதிப்புமின்றி வழக்கம்போல் இயங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கவும், நிலையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்கவும் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சம் அரசு ஊழியர்களை உள்ளடக்கிய இந்த முயற்சியைத் தனியார் துறையினரும் தகுந்த துறைகளில் பின்பற்றுமாறு அரசு பரிந்துரைத்துள்ளது.

Related News