கோலாலம்பூர், ஜூலை.11-
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் மற்றும் பொதுச் சேவைத் துறை, வாரத்திற்கு 45 மணி நேர ஷிப்ட் வேலையிலிருந்து 82 ஆயிரத்து 637 சுகாதார பணியாளர்களுக்கு விலக்கு அளிக்க முடிவு செய்து இருப்பது ஒரு மகிழ்ச்சியான செய்தியாகும் என்று மேலவை உறுப்பினர் செனட்டர் டாக்டர் ஆர். ஏ. லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
இது உண்மையிலேயே நிம்மதி பெரும் மூச்சை ஏற்படுத்துகிறது என்று டாக்டர் லிங்கேஸ்வரன் குறிப்பிட்டார்.
தங்கள் நேரத்தைப் பொருட்படுத்தாமல் பல உயிர்களைக் காப்பாற்ற இரவும் பகலும் உழைக்கும் நமது சுகாதாரத்துறை பணியாளர்களின் தியாகங்கள், கஷ்டங்கள் மற்றும் விடாமுயற்சிக்கு இது ஒரு சிறந்த அங்கீகாரமாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் வர்ணித்தார்.
சுகாதார அமைச்சின் ஐந்து முக்கியச் சேவைத் திட்டங்களுக்கு வாரத்திற்கு 42 மணிநேர வேலை நேரத்தை நிர்ணயித்த நடவடிக்கையானது, முன் நிலை பணியாளர்களின் மனோநிலை, உடல்நிலை மற்றும் உணர்ச்சி நிறைந்த அவர்களின் நல்வாழ்விற்கு அரசாங்கம் எடுத்துக் கொண்டுள்ள அக்கறைக்குச் சான்றாகும் என்று டாக்டர் லிங்கேஸ்வரன் புகழ்மாலை சூட்டினார். இது வெறும் எண்ணிக்கை அல்லது கொள்கைகள் தொடர்புடைய விஷயங்கள் அல்ல, மாறாக, மலேசிய மடானியை அடிப்படையாகக் கொண்ட மனிதநேயம் மற்றும் கருணையின் மதிப்பீட்டைப் பற்றியதாகும்.
இதற்காகப் போராடிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்ட டாக்டர் லிங்கேஸ்வரன், இந்த நடவடிக்கைக்கு அரசு ஊழியர்களைப் பாராட்டுவதற்கும், சிறந்த எதிர்காலத்திற்காக நாட்டின் சுகாதார அமைப்பை வலுப்படுத்துவதற்கும் அதிகமான முயற்சிகளின் தொடக்கமாக இது இருக்கும் என்று தாம் நம்புவதாக டாக்டர் லிங்கேஸ்வரன் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.








