கோலாலம்பூர், ஜூலை.12-
நாட்டில் நிலவி வரும் தாதியார்கள் பற்றாக்குறை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சுல்கிஃப்லி அஹ்மாட் தெரிவித்துள்ளார்.
தாதியார் பற்றாக்குறை பிரச்னையைக் கையாளுவதில் சுகாதார அமைச்சு தொடர்ந்து உறுதிப் பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சு பல்வேறு உறுதியான மற்றும் நீண்ட கால அடிப்படையிலான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதன் மூலம் நாட்டில் அதிகரித்து வரும் தாதியர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று டாக்டர் சுல்கிஃப்லி குறிப்பிட்டார்.
இவ்வாண்டு ஜுன் மாத நிலவரத்தின்படி நாடு முழுவதும் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 667 தாதியர்கள் உள்ளனர். இது அரசு மற்றும் தனியார் துறையை உள்ளடக்கியிருக்கிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.
அதே வேளையில் காலியிடங்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை எட்டியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.








