சுக்மா விளையாட்டு போட்டிகளானது இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் திட்டமிட்டபடி நடத்தப்பட வேண்டுமென சரவாக் மாநில அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு மோதலை முன்னிட்டு போட்டியை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்திருந்தாலும், அதனை நிராகரித்துள்ளது.
இது குறித்து மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் அப்துல் கரீம் ரஹ்மான் ஹம்ஸா கூறுகையில், போட்டிக்கான முன்னேற்பாடுகளுக்காக ஏற்கனவே மிகப்பெரிய தொகை செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்பாடுகள் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல அம்சங்களுக்கு முன்பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், சரவாக் மாநில விளையாட்டு வீரர்கள் பல இடங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் பயிற்சிக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுக்மா போட்டிகளை ஒத்திவைத்தால், வீரர்கள் பலர், 21 வயது வரம்பை கடந்துவிடுவதால் அவர்கள் பங்கேற்க முடியாமல் போகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில், மத்திய கிழக்கு போர் எப்போது முடியும் என்பது தெரியாத நிலையில், போட்டியை ஒத்தி வைத்தால் அது அடுத்த ஆண்டு அல்லது அதற்கு மேலும் தாமதமாகும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை, மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷரஃபுதீன் இத்ரிஸ் ஷா, மத்திய கிழக்கு நிலவரத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு சுக்மா போட்டியை ஒத்திவைக்க பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








