கூச்சிங், டிசம்பர்.15-
திரங்கானுவில் இரு கணவர்களைத் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெண் தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட குழந்தைகளின் நலன் மற்றும் நல்வாழ்வுக்கு, மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு முன்னுரிமை அளிக்கும் என உறுதியளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட குழந்தைகள் தொடர்ந்து பாதுகாப்பில் இருப்பதை உறுதிச் செய்யும் வகையில், இந்த விவகாரம் குறித்து விரிவான தகவல்களைத் தாம் பெற உள்ளதாக அதன் அமைச்சர் டத்தோ ஶ்ரீ நான்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
இது மதம் மற்றும் சட்டம் சார்ந்த விவகாரம் என்பதால், சம்பந்தப்பட்ட அமைச்சர்களின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படும் என்றும் நான்சி குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், இந்த வழக்கானது தற்போது திரங்கானு இஸ்லாமிய சமய விவகாரத் துறையினரால் கையாளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
திரங்கானுவில் சட்டப்பூர்வ கணவர் உள்ள நிலையில், தாய்லாந்தில் மறைமுகமாக இரண்டாம் திருமணம் செய்து கொண்ட அப்பெண், பகலில் தாய்லாந்து கணவருடனும், இரவில் சட்டப்பூர்வக் கணவருடனும் கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில், அப்பெண்ணின் சட்டப்பூர்வக் கணவரின் சகோதரி தனது முகநூலில் இது குறித்துப் பதிவிட்டதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.








