கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வீடு புகுந்து கொள்ளையிடுவதில் தீவிரமாக ஈடுபட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் ரோயிங்யா இனத்தைச் சேர்ந்த மாதுவையும், அவரின் இரு பெண் பிள்ளைகளையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
33 வயதுடைய அந்த அந்நிய நாட்டு மாதுவும், 13,14 வயதுடைய அவரின் இரு பிள்ளைகளும் ஆகக்கடைசியாக கேமாமன், கம்போங் பெங்கலன் சிர் என்ற இடத்தில் ஓர் வீட்டில் கொள்ளையடித்து விட்டு காரில் தப்பிச் செல்லும் போது விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அவர்கள் பிடிபட்டனர் என்று திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை கம்போங் பிஞ்சாய் என்ற இடத்தில் இரவு 7 மணியளவில் தாயும், இரு மகள் மகள்களும் பயணித்த கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து சாலையை விட்டு விலகி மரத்தில் மோதியதில் மூவரும் பிடிபட்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
ஏற்கனவே மூன்று குற்றப்பதிவுகளை கொண்டுள்ள அந்த மாது, ஜோகூரில் நிகழ்ந்த வீடு புகுந்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் அவர் தேடப்பட்டு வருகின்றவர்களின் பெயர் பட்டியலில் இருப்பது தெரியவந்துள்ளது.
அந்த மாதுவையும் அவர்களின் பிள்ளைகளையும் கைது செய்தது மூலம் இரண்டு கார்கள், தங்க ஆபரணங்கள், இரண்டு கத்திகள், ரொக்கப்பணம் உட்பட சுமார் ஒரு லட்சம் வெள்ளி பெறுமானமுள்ள பொருட்களும் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக டத்தோ மஸ்லி மஸ்லான் குறிப்பிட்டார்.








