கோலாலம்பூர், செப்டம்பர் 21-
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மக்களவைக் கூட்டத் தொடரில் தமக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வரும்படி எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சவால் விடுத்துள்ளார்.
தமக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும் அது சட்டப்பூர்வமாக நடத்தப்பட வேண்டுமே தவிர வெறுமனே பதவி விலகச்சொல்லி உணர்ச்சிகரமான விவகாரங்களை முன்னிலைப்படுத்தி, அரசியல் சித்து விளையாட்டைக் கொண்டிருக்க வேண்டாம் என்று எதிர்க்கட்சியினருக்கு பிரதமர் நினைவுறுத்தினார்.
பிரதமர் பதவியிலிருந்து தாம் விலக வேண்டும் என்று 30 பேர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டில் சட்டத்திட்டங்கள் இல்லை என்று அவர்கள் நினைத்துக்கொண்டு இருக்கின்றனர் என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பட்டார்.
உண்மையிலேயே தம்மீது அதிருப்தி கொண்டிருந்தால், தாம் பதவி விலகியாக வேண்டும் என்று நினைத்தால் அதனை சட்டப்பூர்வமான அணுகுமுறை வாயிலாக மேற்கொள்ள முடியுமே தவிர வெறும் உணர்ச்சிகரமான விவகாரங்களை தூண்டி, பதவியிலிருந்து இறக்கி விட முடியாது என்று பிரதமர் நினைவுறுத்தினார்.
நேற்று இரவு கோலாலம்பூர், புக்கிட் ஜலீல் Axiata Arena அரங்கில் நடைபெற்ற சீர்திருத்தத்திலிருந்து மலேசிய மடானி அரசாங்கம் என்ற தலைப்பில் நடைபெற்ற Keadilan கட்சியின் மக்கள் குரல் எனும் நிகழ்வில் உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வில் பிரதமரின் துணைவியார் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், PKR கட்சியின் பொதுச் செயலாளர் ஃபுஜியா சலே, தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபாட்சில் உட்பட சுமார் பத்தாயிரம் பேர் கலந்து கொண்டனர்.








