ஜோகூர்பாரு, டிச.9-
ஜோகூர்பாரு, பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் குடிநுழைவு, சுங்கம் மற்றும் நோய்தடுப்பு சோதனை மையத்தின் தானியங்கி ஆட்டோ கேட்முறை நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 செயலிழந்ததால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
இதனால், பயணிகளின் குடிப்புகல் மற்றும் குடிவெளியேற்றம் உட்பட ஜோகூர்பாருவிற்கு மக்களின் நுழைவு மற்றும் வெளியேற்றம் ஸ்தம்பித்தது.
ஒரே நேரத்தில் 42 ஆட்டோ கேட்நுழைவாயில்கள் செயலிழந்ததால் மக்களின் வெளியேற்றம் மற்றும் வரவு ஆகிய நடைமுறைகளை கையாளுவதற்கு குடிநுழைவு அதிகாரிகள் கைமுறை செயலாக்கத்தை பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர்.
அந்த கட்டிடத்தில் உள்ள மலாயன் ரயில்வே பெர்ஹாட்டின் ரயில் சேவைக்கான ஆட்டோ கேட்நுழைவாயில்களும் செயலிழந்தன. எந்தவொரு நுழைவாயிலின் தானியிங்கி முறையும் செயல்படவில்லை என்று பாதுகாவல் பணியில் ஈடுபட்டு இருந்த ஒருவர் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவம் இதற்கு முன்பு நடந்ததில்லை. நேற்று ஞாயிற்றுக்கிழமை இச்சம்பவம் நிகழ்ந்ததால் ஆயிரக்கணக்கான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
குறிப்பாக , சிங்கப்பூரியர்கள் உட்பட பள்ளி விடுமுறையை கழிப்பதற்கு மலேசியாவிற்கு வந்தவர்கள் தங்களின் கடப்பிதழ் சோதனையை முடித்துக்கொள்வதற்கு பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர்.
எனினும் மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் கனரக வாகனமோட்டிகளுக்கு இந்த பாதிப்பு ,எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.








