உலுசிலாங்கூர், நவ. 15-
வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டு இருந்த உதவி போலீஸ்காரர் ஒருவர், விபத்தில் உயிரிழந்தார். இச்சம்பவம், நேற்று இரவு 11.30 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 408 ஆவது கிலோமீட்டரில் உலு சிலாங்கூருக்கு அருகில் நிகழ்ந்தது.
ஷா ஆலாம், பணியிடத்திலிருந்து உலு சிலாங்கூரில் உள்ள தனது வீட்டிற்கு அந்த உதவி போலீஸ்காரர் திரும்பிக்கொண்டு இருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
மோட்டார் சைக்கிள் விழுந்து கிடந்த இடத்திலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் சாலையோர புதரில் அந்த உதவி போலீஸ்காரர் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக இன்று காலை 6 மணிக்கு உலு சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் புகார் ஒன்றை பெற்றது. 24 வயது இளைஞர் செலுத்திய டோயோட்டா வியோஸ் கார், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, அந்த மோட்டார் சைக்கிளை மோதியதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது என்று உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் அகமட் பைசால் தாஹ்ரிம் தெரிவித்தார்.








