ஜோகூர், குளுவாங் அருகே உள்ள ஸ்ரீ லாலாங், கம்போங் ரஹ்மத் பகுதியில் புலி ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருவதால் அப்பகுதி கிராம மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
சுமார் ஒரு நிமிடம் 36 விநாடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில், தோட்டத்திற்குப் பின்னால் உள்ள புதர்களுக்கு இடையே புலி ஒன்று மெதுவாக நகர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.
தோட்ட உரிமையாளர் ஒருவர் தனது தொழிலாளர்களை அழைத்துச் செல்ல வாகனத்தில் சென்றபோது, புதர்களுக்குள் சத்தம் கேட்டுப் பார்த்ததில் இந்தப் புலி தென்பட்டதாக ஜோகூர் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்த புகார், மாநில வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையிடம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் யாரும் வனவிலங்குகளை நெருங்கவோ அல்லது அவற்றைச் சீண்டவோ வேண்டாம் என்றும், ஏதேனும் விலங்குகள் தென்பட்டால் உடனடியாக போலீசாருக்கோ அல்லது வனத்துறைக்கோ தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.









